எரிபொருள் விநியோகத்தில் பாரிய மோசடி! - மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பு

breaking

பெட்ரோலிய வளக்கூட்டுத்தாபனத்தின் அசமந்த போக்கினால், எரிபொருளுக்கு மக்கள் கூடுதல் தொகையை செலுத்த நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு பிறப்பிக்கப்பட வேண்டிய சுற்றுநிருபம் ஒன்று எட்டு ஆண்டுகளாக வெளியிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு சுற்றுநிருபம் வெளியிடுவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக மக்கள் ஒரு லீட்டர் எரிபொருளுக்கு 7 ரூபா கூடுதலாக செலுத்த நேரிட்டுள்ளது.

குறிப்பாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தரகுப் பணத்தை கூடுதலாக செலுத்தியமையினால் இவ்வாறு மக்கள் மீது வரிச்சுமை திணிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியவளக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவைச் சேர்ந்தவர்கள் இழைத்த தவறினால் நாட்டு மக்கள் இவ்வாறு எரிபொருளுக்கு கூடுதல் விலை செலுத்த நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையில் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக எரிபொருளுக்காக கூடுதல் சுமையை சுமக்க வேண்டியுள்ளமை தொடர்பில் அதன் சந்தைப்படுத்தல் திணைக்கள அதிகாரிகளே பொறுப்பு என்று குழு குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, இந்த மோசடி தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஏழு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திற்கு குழு பரிந்துரைத்தது.

அதிகாரிகளின் இந்த மோசடியினால், ஒக்டேன் 92 பெட்ரோல் லிட்டருக்கு 5.85 ரூபாயும், 95 பெட்ரோல் லிட்டருக்கு 7.50 ரூபாயும், லெட் 5.88 ரூபாயும், எல்எஸ்டிக்கு 6.96 ரூபாயும் நுகர்வோர் செலுத்துவதாக மேலும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த மோசடிக்கு காரணமான அதிகாரிகள் தற்போது நாட்டில் இல்லை என்றும், மோசடியில் ஈடுபட்ட நபர்களின் பெயர் பட்டியல் அடங்கிய விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு குழு பரிந்துரைத்துள்ளது.

இதற்கமைய, உள்ளக விசாரணைகளுடன் சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியுள்ளது.